Sangathy News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்-காதிர் (Al-Qadir) எனப்படும் அறக்கட்டளை தொடர்பான வழக்கிலேயே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்தின் பொலிஸ் உயரதிகாரியொருவர் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தினால் இது தொடர்பில் மே முதலாம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் துணை இராணுவத்தினர் இம்ரான் கானின் தலையில் தாக்கி அவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை இராணுவப் படையினரால் கடத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ-இன்சf (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இம்ரான் கானின் கைது தொடர்பில் அரச அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இஸ்லாமாபாத் மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நால்வருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தடையுத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் இஸ்லாமாபாத் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Exit mobile version