இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவிப்பு
INDIA: மே 28 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், CPM, CPI, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக ஆகிய 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானமானது, குடியரசுத் தலைவருக்கு அவமானமாக அமையும் என்பதுடன், அது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டடத்திற்கு மதிப்பு இல்லை என்பதால், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக, அனைத்து விதித்திலும் தொடர்ந்து போராடப்போவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி மறுத்துவிட்டது. எனினும், நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அக்கட்சி தனியாக அறிவித்துள்ளது.