Site icon Sangathy News

இந்திய மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மர்மப் பொருட்களை வீசிய இருவர் கைது; வௌியில் இரண்டு பெண்கள் கைது

Colombo (News 1st) இந்திய பாராளுமன்ற மக்களவைக்குள் மர்மப் பொருட்களை வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மக்களவையில் இன்று (13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 

அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரையும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அவை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். 

இதற்கிடையே, பாராளுமன்றத்திற்கு வெளியேயும் பெண்கள் இருவர் கோஷம் எழுப்பியபடி பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சரியாக 1 மணியளவில் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் குதித்தவர்கள் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று கோஷமிட்டுள்ளனர்.

இதேபோல், அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டுள்ளனர். 

குறித்த பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக பொலிஸாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து, பாராளுமன்றத்திற்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார். 

Exit mobile version