Site icon Sangathy News

இலங்கையின் பொருளாதார நோக்கு தொடர்பாக இந்திய நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி தௌிவூட்டல்

Colombo (News 1st) இலங்கையின் பொருளாதார நோக்கு தொடர்பாக இந்திய நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தௌிவூட்டியுள்ளார். 

இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து நேற்று (16) சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்காக இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதன் ஊடாக உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்பிற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் அரச நிறுவனங்களில் தனியார் முதலீட்டை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொலைத்தொடர்பு, நிதிச் சேவைகள் மற்றும் எரிசக்தி போன்ற இலங்கையின் முக்கிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்கரையை அண்டியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி குறித்து கவனம் செலுத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் நிலையான ஆற்றல் தீர்வுகளில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அதிக திறன் கொண்ட இருதரப்பு மின்சார இணைப்பை ஏற்படுத்துவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வி, கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் சுற்றுலா மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த  வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

Exit mobile version