Site icon Sangathy News

பீர் குடிப்பது உடலுக்கும், இதயத்துக்கும் நல்லதா..? : வெளியான பகீர் ரிப்போர்ட்..!

பீர் குடிப்பது உடல்நலனுக்கும், இதயத்துக்கும் நன்மை பயக்கிறதா என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.

வழக்கமாக மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் கோடைக்காலம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இப்போது மார்ச் மாதமும் தொடங்கிவிட்டதால், தமிழகத்தை வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டது. அதுவும் இந்த ஆண்டு கோடைக்காலம் மிக உக்கிரமாகவும், மழையே இல்லாமல் கடும் வறட்சியாகவும் இருக்கும் என வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடைக்காலம் ஆரம்பித்தாலே இரண்டு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிய தொடங்கிவிடும். ஒன்று ஜூஸ் கடை. மற்றொன்று டாஸ்மாக். இதில் முதல் கடைக்கு மக்கள் செல்வது நியாயம். ஆனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி கொப்பளிப்பதுதான் வியப்பான விஷயம். அதிலும் கோடைக்காலத்தில் பீர் விற்பனை அடித்து துவம்சம் செய்துவிடும். அதற்கு குடிமகன்கள் ஆண்டாண்டு காலமாக ஒரு காரணமும் வைத்திருக்கின்றனர்.

பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதுதான் அந்தக் காரணம். இதை தவிர, பீர் அருந்துவது இதயத்துக்கு மிகவும் நல்லது என்று வேறு அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். சிலரோ தனது உடலை பருக்க வைப்பதற்கும், முகத்தை பளபளப்பாக்குவதற்கும் பீர் குடிப்பதாக சொல்வார்கள். இப்படி ஒருபக்கம் இவர்கள் கூறிக் கொண்டிருக்க, பீர் குடிப்பது உண்மையிலேயே உடல்நலனுக்கும், இதயத்துக்கும் நல்லதா என்பது பற்றி ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இதுகுறித்து மருத்துவர்களிடம் கருத்து கேட்பது அவசியமாகிறது.

அந்த வகையில், இதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர். நவீன் ராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இனி அவரது வார்த்தைகளில் இதை கேட்போம். “பீர் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி என்று பலரும் நினைத்து வருகிறார்கள். அதுவும் பீரை கூலிங்குடன் வாங்கி குடித்தால் அப்படியே அந்த குளிர்ச்சி நமது உடலுக்கு கிடைத்துவிடும் என அவர்கள் நினைக்கிறார்கள். முதலில் இது நூறு சதவீதம் தவறு என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இத்தனை பாதிப்புகளா?

பீர் நமது உடலுக்குள் போகும் போது அதிகமாக நீர் பிரியும். அதாவது சிறுநீர் அதிகமாக வரும். இதை வைத்து, நமது உடல் குளிர்ச்சியாகிவிட்டது என தவறுதலாக நினைக்கிறார்கள். பீரில் இருப்பது எத்தனால். இந்த எத்தனால் உடம்புக்குள் சென்றால் ‘டையூரிசிஸ்’ (Diuresis) ஏற்படும். அதாவது நமது உடல், தன்னிடம் உள்ள நீர்ச்சத்துகளை வேகமாக இழக்கும். இதனால் உடல் சோர்வடையும். ரத்த அழுத்தம் பாதிக்கப்படும். இருதய படபடப்பு ஆகியவை ஏற்படும்.

இதயத்துக்கு நல்லதா?

இரண்டாவது முக்கியமான விஷயம். பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். இதுவும் தவறான கருத்து. வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது எந்த வகையில் ஆல்கஹால் உடலுக்குள் போனாலும், அது பீராக இருந்தாலும் சரி, மற்ற வகை மதுவாக இருந்தாலும் சரி, அது இதயத்துக்கு மட்டுமல்ல உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கும் தீமையை தான் ஏற்படுத்தும். குறிப்பாக, நமது கல்லீரல் பாதிக்கப்படும். கிட்னி பாதிப்பு வரும். கணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஹார்ட் அட்டாக் உறுதி

அதுமட்டுமல்ல, பீர் குடிப்பதால் மூளையும் பாதிக்கப்படும். பீர் உள்ளிட்ட மதுக்களை குடிக்காதவரின் மூளையையும், மது அருந்துபவரின் மூளையையும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தால், மது அருந்துபவரின் மூளை சுருங்கிப் போயிருக்கும். நாளடவைில் இது சிறுமூளை பாதிப்பையும் உண்டாக்கிவிடும். இதில் பீர் வேறு, மற்ற வகை மது வேறு என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே உடலுக்கு பாதிப்பை தரக்கூடியது தான். இப்படி நல்லது என்று நினைத்து தொடர்ந்து பீர் சாப்பிடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். பீரில் கலோரியும் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய் சீக்கிரமாக வரும். இவ்வாறு மருத்துவர் நவீன் ராஜா கூறினார்.

Exit mobile version