Sangathy News

ஏப்ரல் மாத இறுதிக்குள் 2002 கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவார்கள் – அசோக பிரியந்த

Colombo (News 1st) வெற்றிடமாகவுள்ள 2002 கிராம சேவகர் பிரிவுகளுக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இந்நாட்களில் நடைபெற்று வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் இன்னும் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் முன்னோக்கிச் சென்றால், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, சிறந்த நாட்டை உருவாக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை முடிவிற்குக்  கொண்டு வந்து தற்போது பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கிராமப்புற வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கிராம அதிகாரிகள் யாப்பு உருவாக்கப்பட்டு அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சாதகமான முடிவை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version