Site icon Sangathy News

முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது..!

கடந்த 13ஆம் திகதி கொழும்பு 15 – முகத்துவாரம் வீதியில் இடம்பெற்ற கொலை முயற்சி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (16) மாலை பேலியகொடை, விக்டோரியா பாலத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடைய பரகந்தெனிய, இம்புக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரால் சந்தேகநபர் ஒருவரும், முகத்துவாரம் பொலிஸாரினால் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயலைச் செய்ய பயன்படுத்திய கார் மற்றும் குற்றச் செயலின் பின்னர் தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஒன்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராகப் பணிபுரிந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி கொலை செய்ய முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version