Site icon Sangathy News

ரூ.200 கோடி மதிப்பிலான ஹவாலா பணம்..சிக்கிய தமிழர் : முக்கிய கட்சிக்கு கைமாற்ற திட்டமா..?

ரூ.200 கோடி ஹவாலா பணம் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய அரசியல் கட்சிக்கு கைமாற்றிவிடும் நோக்கில் சென்னைக்கு வந்த மலேசிய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலைய போலீஸாரிடம் பிடிபட்ட தமிழர் ஒருவர் தெரிவித்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துபாயில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான ஹவாலா பணத்தை தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிக்கு கைமாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெற்று வந்ததாக அந்த நபர் கூறியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மலேசியாவில் இருந்து வினோத் குமார் ஜோசப் என்கிற தமிழரை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தியது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 7-ம் தேதி வந்த அவரை போலீஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவல்கள் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்தன. அதாவது, துபாயில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு வர ஒரு மிகப்பெரிய சதித்திட்டம் நடைபெற்று வருவதும், அந்த நெட்வொர்க்கில் வினோத்குமார் ஜோசப்பும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஜோசப் வசம் இருந்த மொபைல் போன், ஐ-பேட், லேப்டாப் போன்றவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றி, அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளதாக தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அவரது செல்போனில் வாட்ஸ் அப் சாட்டுகளை ஆராய்ந்த போது, துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி பணத்தை ஹவாலா மூலமாக தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிக்கு கொடுப்பதே அந்த நெடவொர்க்கின் நோக்கம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக துபாயில் வசிக்கும் செல்வம் என்ற நபருடன் வினோத்குமார் ஜோசப் பேசி வந்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தப் பணத்தை கைமாற்ற சதித்திட்டம் நடந்து வந்தது கண்டறியப்பட்டது. மேலும், அப்பு என்கிற விநாயகவேலன், வினோத் ஜோசப் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த அப்பு தான் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய அரசியல்வாதிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஹவாலா பரிவர்த்தனையை எளிதாக்குவதற்காக துபாயை சேர்ந்த மோனிகா விரோலா, துபாய்-ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த அல்-மனார் டயமண்ட்ஸ் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version