Site icon Sangathy News

இஸ்ரேல் கப்பல் சிறை பிடிப்பு : 17 இந்தியர்களை மீட்க இந்தியா பேச்சுவார்த்தை..!

இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, “சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

Exit mobile version