Sangathy News

பிரான்சில் ஒலிம்பிக்ஸை நிறுத்த தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்..!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille] உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது.

Exit mobile version