Site icon Sangathy News

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றம்..!

வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே, 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும், ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களது முதன்மை நோக்கம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடந்தன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

இந்நிலையில், பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சிக்கு பதில் ராவல்பிண்டியில் நடைபெறும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Exit mobile version