Site icon Sangathy News

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய உடலின் பாதியை கேட்டு குடிபோதையில் தகராறு!

தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய உடலின் பாதியையாவது தர வேண்டும் என சகோதரர் ஒருவர் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவருடைய மூத்த மகன் கிஷன் மற்றும் இளைய மகன் தேஷ்ராஜு ஆவார். இதில், இளைய மகனுடன் தயானி சிங் கோஷ் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் கோஷ் உயிரிழந்தார். இதனை அறிந்த மூத்த மகன் கிஷன், தம்பியின் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்ய வேண்டும் என்று தம்பியிடம் கூறினார். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்தார்.

தான் தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என்று இளைய மகன் கூறினார்.

ஆனால், மது போதையில் இருந்த மூத்த மகன், தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய உடலின் பாதியையாவது தர வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

பின்னர், இதுகுறித்து ஜதாரா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூத்த மகனை சமாதானப்படுத்தி அவரை அழைத்துச் சென்றனர்.

இறுதியாக, தந்தைக்கு இளைய மகனே இறுதிச்சடங்கு செய்து முடித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version