Site icon Sangathy News

ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த ஒருவர் கைது

சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூக ஊடக வலைதளங்கள் மூலம் பகிர்ந்த சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வழங்கிய அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில், பேஸ்புக் மூலம் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுவர்கள் தொடர்பான பாலியல் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வழங்கிய நபர் ஒருவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த கணக்கு தொடர்பாக விசாரணையை ஆரம்பித்த பொலிஸார், இது தொடர்பாக புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபருக்கு சொந்தமான தொலைபேசியை பகுப்பாய்வு பொலிஸார் பெற்றுள்ள நிலையில், இதன்போது சந்தேக நபர் ராகம பிரதேசத்தில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.

ராகம, கெந்தலியத்த பிரதேசத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் 20 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய கைபேசி மற்றும் கணினி ஒன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version