Site icon Sangathy News

இந்தியாவிலிருந்து மகனை பார்க்க கனடா சென்ற மூதாட்டி காத்திருந்த அதிர்ச்சி | Indian Grandma Canada Trip Turns 96K Medical Bill

இந்தியாவிலிருந்து தனது அன்பு மகனைப் பார்ப்பதற்காக கனடா சென்ற 88 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா சூப்பர் விசா மற்றும் மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு
அலைஸ் ஜான் என்ற 88 வயது மூதாட்டி, கனடாவில் வசிக்கும் தனது மகன் ஜோசப் கிறிஸ்டியை பார்ப்பதற்காக ஆறு மாத கால சூப்பர் விசா மூலம் கடந்த ஜனவரி 2024-ல் கனடாவின் பிராம்ப்டன் நகருக்குச் சென்றுள்ளார்.

சூப்பர் விசா என்பது கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி போன்றவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு கனடாவில் தங்குவதற்கு உதவும் ஒரு சிறப்பு விசா திட்டமாகும்.

கனடா சென்ற சில மணி நேரங்களிலேயே அலைஸ் ஜானுக்கு திடீரென மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்பட்டதுடன் பின்னர் அவருக்கு காய்ச்சல், தொடர் இருமல் அறிகுறிகளும் தென்பட்ட நிலையில் அவர் ஹாமில்டன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சுமார் மூன்று வாரங்கள் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பம், கனடாவில் மருத்துவச் செலவுகளை சமாளிக்க Manulife என்ற முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அடிப்படை சூப்பர் விசா பயணக் காப்பீட்டு பாலிசி ஒன்றை எடுத்திருந்துள்ளது.

இந்த பாலிசி மூலம் அதிகபட்சமாக $100,000 வரை மருத்துவச் செலவுகளைக் கோர முடியும்.

ஆனால், எதிர்பாராத விதமாக அலைஸ் ஜானின் மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீட்டு கோரலை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது.

இதற்கான காரணமாக அலைஸ் ஜானுக்கு ஏற்கனவே இருந்த உடல்நலப் பிரச்சனை காரணமாக பாலிசியின் விதிமுறைகளின்படி காப்பீடு வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

57 லட்சம் ரூபாய் மருத்துவச் செலவு மற்றும் மறு ஆய்வு
காப்பீட்டு கிளைம் நிராகரிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அலைஸ் ஜானுக்கு ஏற்பட்ட $96,311 (இந்திய மதிப்பில் சுமார் 57 லட்சம் ரூபாய்) என்ற மலைப்பான மருத்துவச் செலவை அவர்களே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த Manulife நிறுவனம், ஆரம்பத்தில் கிளைம் நிராகரிக்கப்பட்ட போதிலும், இந்த வழக்கை மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் முழுமையாக பரிசீலிக்க முன்வந்தது.

மேலும் இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது, அவர்கள் அந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து Manulife நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில சமயங்களில் மருத்துவப் பதிவுகளுக்கும், காப்பீட்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கும் இடையே தெளிவற்ற முரண்பாடுகள் ஏற்படலாம். இதுபோன்ற தனித்துவமான மற்றும் உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகளில் நாங்கள் மறு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான முடிவுகளை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version