Site icon Sangathy News

மே தினத்திற்காக விசேட போக்குவரத்து திட்டம்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளுக்காக பொலிஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விசேட வாகன போக்குவரத்து திட்டமொன்றும் செயல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், வெளி மாகாணங்களில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்பாக தேவையான பாதுகாப்பு, வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதை பாதுகாப்பு ஆகியவற்றை உரிய முறையில் வழங்குவதற்கு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் தலைமையகத்தால் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்களும் உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுமாயின், அப்பகுதிகளைத் தவிர்த்து மாற்று வீதிகள் வழியாக வாகன போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மாற்று வீதிகள் பற்றிய தகவல்கள் தேவைப்படும் போது, வாகன போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து உதவி பெறலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version