Site icon Sangathy News

இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா

இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து விளாசினார்.

வெறும் 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 116 ரன்கள் எடுத்தார். மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.

343 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலைத் சமாளிக்க முடியாமல் திணறியது.

அந்த அணியில் கேப்டன் சாமரி அதபத்லு (51 ரன்கள்) மற்றும் நிலக்ஷிகா சில்வா (48 ரன்கள்) மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஸ்கோர் செய்தனர். இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமன்ஜோத் கவுர் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரங்களில் சுருண்டது.

இறுதிப் போட்டியில் அபார சதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, ‘ஆட்ட நாயகி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சினேகா ராணா, ‘தொடரின் சிறந்த வீராங்கனை’ விருதை வென்றார். இதற்கிடையில், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த பெண்கள் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார்

Exit mobile version