Site icon Sangathy News

நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்த லண்டன் ஐகோர்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அவரது ஜாமீன் மனுவை லண்டன் ஐகோர்ட்டு, கிங்ஸ் பெஞ்ச் பிரிவு நிராகரித்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது 10வது ஜாமீன் மனுவாகும். தனக்கு எதிராக கொலை முயற்சி நடப்பதாக அவர் புகார் கூறியிருந்த நிலையில், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு கணிசமான மோசடி குற்றச்சாட்டை உள்ளடக்கியது என்று தெரிவித்தனர். மறுபுறம் நீரவ் மோடி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வாதிடுகையில், இந்திய அரசு தரப்பிலிருந்து நீரவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இருப்பினும் நீரவ் மோடி தப்பி ஓடமாட்டார். இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கியர்களை குறி வைத்து சதி திட்டங்களை தீட்டி வருகிறது” என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. அவர் இந்தியாவுக்கு வந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையை பெறுவார் என்று கூறப்படுகிறது.

Exit mobile version