Site icon Sangathy News

இரண்டு கப்பல் விபத்துகளில் 400க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் பலி?

மே 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் நடந்த இரண்டு கப்பல் விபத்துகளில் மியான்மாரின் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்களில் குறைந்தது 427 பேர் இறந்திருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் (UNHCR) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த இரண்டு சம்பவங்களும் – உறுதிப்படுத்தப்பட்டால் – இந்த ஆண்டு இதுவரை ரோஹிங்கியா அகதிகள் சம்பந்தப்பட்ட “கடலில் நடந்த மிக மோசமான சோகம்” இதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

“இந்த மாத தொடக்கத்தில் மியான்மார் கடற்கரையில் இரண்டு படகு விபத்துக்கள் பற்றிய செய்திகள் குறித்து ஐ.நா. அகதிகள் நிறுவனம் மிகுந்த கவலை கொண்டுள்ளது” என்று UNHCR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கப்பல் விபத்துகளைச் சுற்றியுள்ள சரியான சூழ்நிலைகளை உறுதிப்படுத்த இன்னும் செயல்பட்டு வருவதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

மே 9 அன்று 267 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் மூழ்கியதாகவும், அதில் 66 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும், மே 10 அன்று 247 ரோஹிங்கியாக்களுடன் இரண்டாவது கப்பல் கவிழ்ந்ததாகவும், அதில் 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷின் மிகப்பெரிய காக்ஸ் பஜார் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேறியோ அல்லது மியான்மாரின் மேற்கு மாநிலமான ரக்கைனை விட்டு வெளியேறியோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version