Site icon Sangathy News

காஸா பள்ளி மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் – 25 பேர் பலி !

அகதிகள் முகாமாக செயல்படும் காஸா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

காஸா மக்களின் தங்குமிடங்களாக உள்ள பள்ளிகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதுவரை காஸாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காஸா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை 25 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு துறை அறிவித்தது. அத்தோடு இத்தாக்குதலில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் பள்ளியின் பாதி பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இப்போரில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் 53,901 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

1.22 இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காஸா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version