Site icon Sangathy News

சென்னை பொழுதுபோக்கு பூங்காவில் இராட்சத ராட்டினத்தில் சிக்கிக்கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்பு..!

சென்னை – ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடும் வகையில் பல்வேறு விதமான ராட்டினங்கள் உள்ளன.

இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடி விளையாடி மகிழ்வதுண்டு. தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பொழுது போக்கு மையத்தில் இருந்த `டாப் கன்’ எனும் ராட்சத ராட்டினம் ஒன்றில் சுமார் 30 பேர் 120 அடி உயரத்தில் அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர்.

ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களை மீட்க வேண்டுமென உதவி கோரினர்.

தகவலறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ராட்சத இயந்திரத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு பணியானது நீண்டு கொண்டே சென்றதால் அவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வழியாக 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த மீட்பு பணியில் முதலில் 14 பேர் மீட்கப்பட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 36 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்த ராட்டினத்தில் மேல் வரிசையில் 15 பேர், கீழ் வரிசையில் 15 பேர் என மொத்தம் 30 பேர் பயணிக்க முடியும். நேற்று மாலை 8 சிறுவர்கள், 10 பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் ராட்டினத்தில் ஏறினர். மாலை 7 மணியளவில் மேலே சென்ற ராட்டினம் தொழில்நுட்ப கோளாறால் அங்கேயே தடைபட்டு நின்றது. இதனால் 120 அடி உயரத்தில் 30 பேரும் அந்தரத்தில் சிக்கிக் கொண்டு கதறினர். இதை கீழேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்களும் பீதியடைந்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தனர். தொழில்நுட்ப கோளாறு சரியாகவில்லை. இதைத்தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீலாங்கரை போலீசாரும் துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ராட்சத கிரேன் மூலம் பிஸ்கட், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப் பட்டன. தீயணைப்பு துறையின் ராட்சத ஏணி மூலம் 3 மணி நேரத்துக்கு பின் ராட்டினத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version