Site icon Sangathy News

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது.

தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும்.”- என்றார்.

Exit mobile version