இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டில் மொத்தமாக 23,744 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாதாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த மார்ச் மாதத்தில் 3,766 நோயாளர்களும் ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளர்களும் மே மாதத்தில் 6,042 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனிடையே இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 13 டெங்கு தொடர்பான மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பருவமழை தொடங்குவதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து, டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

