காசாவுக்கு பிரவேசிக்க முயன்ற நிலையில், இஸ்ரேலிய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட படகில், காலநிலை தொடர்பான ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மற்றும் பிரான்சின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 12 பேர் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.
முன்னதாக மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இஸ்ரேலிய படைத்தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.
எகிப்திய கடற்பரப்பை அண்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த படகு தடுக்கப்பட்டது.
இந்தநிலையில், பாரஊர்தி ஒன்றில் ஏற்றிச் செல்லக்கூடிய பொருட்களே அந்த படகிலிருந்ததாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய துறைமுக நகரான ஆஷ்டோட்டை (Ashdod) நோக்கி இந்த படகு பயணித்துக் கொண்டிருந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, படகில் பயணித்த ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பாலஸ்தீனிய வெளிவிவகார அமைச்சு, ஐக்கிய நாடுகளைக் கோரியுள்ளது.
இதுதவிர, காசா மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குக் கூடுதலான கப்பல்களை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

