Site icon Sangathy News

அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது : பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க கனடா முடிவு..!

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றும் வகையில், கனடா பிரதமர் மார்க் கார்னி புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

இவர், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும்போது, “இன்று உலகம் அபாயகரமானதும் பிரிக்கப்பட்டதுமான நிலைமைக்கு சென்றுள்ளது. கனடா தனது பாதுகாப்பை தானாகவே நிலைநிறுத்தக்கூடியதாக மாற வேண்டும்” எனக் கூறினார்.

நேட்டோ அமைப்பின் 2 சதவீத பாதுகாப்பு செலவுத் திறனைக் கடந்த ஆண்டுகளில் எட்ட முடியாத நிலையில் இருந்த கனடா, இந்த நிதியாண்டுக்குள் அந்த இலக்கை எட்டும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது கானடா தனது GDP-யின் 1.45 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கி வருகிறது.

முக்கியமாக, கனடா அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வந்தது.

ஆனால் தற்போதைய சூழலில், அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ட்ரம்ப் அரசின் விதிகளால் பாதிக்கப்பட்ட பிறகு, “கனடாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு முன்னுரிமை அளிப்பது உட்பட ஒவ்வொரு டொலரும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என கார்னி தெரிவித்தார்.

அர்க்டிக் பகுதியில் பலதேசங்களுடன் இணைந்து நடத்திய ராணுவ பயிற்சிகள், கனடாவின் வளங்கள் குறைந்த நிலையை வெளிக்கொணர்ந்துள்ளன. அதில், நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்று மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் உள்ளது என்றார்.

இந்நிலையில், பாதுகாப்பு மேம்பாட்டிற்கான இந்த நடவடிக்கைகள், வரவிருக்கும் G7 உச்சி மாநாட்டிலும் முக்கியப் பொருளாக அமையும்.

Exit mobile version