Site icon Sangathy News

ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு ; பத்து பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிராட்ஸ் நகரிலுள்ள பள்ளி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டதையடுத்து அப்பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் பலர் இறந்துவிட்டதாக ஆஸ்திரிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூரின் குரோனன் ஸைத்துங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்று உள்துறை அமைச்சை சுட்டி, ஓஆர்எஃப் ஒலிபரப்பு நிறுவனம் குறிப்பிட்டது. பள்ளி மாணவர் ஒருவரே அந்த வன்முறைச் செயலில் இறங்கியதாகவும் பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனதாகவும் அச்செய்தி கூறியது.

அந்த உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு குறித்து காலை 10 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இப்போது அப்பள்ளி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டது என்றும் இனி அபாயம் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version