இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமான வழக்கில் அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜாவின் மனைவியான சோனம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தம்பதியரின் குடும்பம் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தது.
இந்நிலையில், சோனம் பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோனம், மூன்று பேருக்கு பணம் கொடுத்து தன் கணவரைக் கொலை செய்யச் சொல்லியதாக ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தன் மகள் நிரபராதி, அவளால் தன் கணவரை கொலை செய்ய முடியாது, இரு குடும்பங்களின் சம்மதத்தின்பேரில்தான் இந்த திருமணம் நடந்தது.
அரசு அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள், ஆகவே CBI விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் சோனமுடைய தந்தையான தேவி சிங்.
இன்னொரு பக்கம், சோனமுக்கும் ராஜா குஷாவா என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும், குஷாவா ஆள்வைத்து சோனமுடைய கணவரான ராஜாவை கொலை செய்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சோனமும் உடந்தை என கூறப்படும் நிலையில், பொலிசார் குஷாவாவையும், ராஜாவைக் கொல்ல அவர் ஏற்பாடு செய்ததாக கூறப்படும் விஷால் சௌகான், மற்றும் ஆனந்த் குமார் ஆகியோரையும் கைது செய்துள்ளார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர் என கருதப்படும் மற்றொரு நபரான ஆகாஷ் ராஜ்புத் என்பவர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை தேடிவருகிறார்கள்.

