Site icon Sangathy News

சிக்குன்குனியா, டெங்கு நோய்கள் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இது ஒரு ஆபத்தான நோய் அல்ல என்ற போதிலும், சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் நிலைமை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காய்ச்சல் ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், 2 நாட்களுக்கு மேலாகக் காய்ச்சல் நிலைமை தொடருமாயின், உரிய வைத்தியரை நாடுமாறும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன் ஊடாக, ஏனைய மாணவர்களுக்கும் நோய் நிலைமை பரவுவதற்கான சாத்தியம் நிலவுகிறது.

இன்புளுவென்சா போன்ற வைரஸ் விரைவாக சிறுவர்களிடத்தே பரவக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

காய்ச்சலுடன் எலும்பு மூட்டுக்களில் அதிக வலி உணரப்படுவது குறிப்பாக சிக்குன்குனியா நோய்க்கான அறிகுறியாகும்.

எனினும் சிறுவர்களிடத்தே இவ்வாறான நோய் அறிகுறிகள் அவதானிக்கப்படுவதில்லை.

எனவே, நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version