Site icon Sangathy News

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த நால்வர்

பதவி இடைநீக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பதவித் துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் சாட்சியமளித்தன.

ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் நேற்றையதினம் (11) சாட்சியமளித்தனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடக்கிய குழு நேற்றையதினம் (11) பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது, மு.ப 9.30 மணி முதல் பி.ப 8.00 மணிவரை இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டது.

இதன்போது, விசாரணைக் குழுவும், சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணையில் பங்கெடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோரும், பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ்.வீரவிக்ரம ஆகியோரும் சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகள் முடியும் வரை எதிர்வரும் 16ஆம் திகதிமுதல் விசாரணைக் குழுவை நாளாந்தம் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version