Site icon Sangathy News

கண்திறந்தால் என்னைச் சுற்றி சடலங்கள் – ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் அனுபவம்

இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி உயிர் பிழைத்துள்ளார்.

“கண்திறந்து பார்த்தால் என்னைச் சுற்றி சடலங்களும் விமானச் சிதைவுகளும் இருந்தன. நான் பீதியடைந்தேன். எழுந்து ஓடிவிட்டேன்” என்றார்.

242 பேர் இருந்த விமானத்தில் இருவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உயிர்பிழைத்த பிரிட்டிஷ் நாட்டவரான 40 வயது விஷ்வகுமார் ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தியாவில் உறவினர்களைச் சந்தித்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்த அவர், விமானம் புறப்பட்டு 30 விநாடிகளில் பெரிய சத்தம் கேட்டதாகவும் அதன் பிறகு விமானம் விபத்துக்குள்ளானதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விமானம் நொறுங்குவதற்கு முன் விஷ்வகுமார் விமானத்திலிருந்து தப்பிவிட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர் விமானத்தின் அவசர வாயிலுக்கு அருகே அமர்ந்திருந்ததாகவும் விபத்து ஏற்பட்டபோது அதிலிருந்து குதித்ததாகவும் பொலிஸார் நம்புகின்றனர்.

விஷ்வகுமார் காயங்களுடன் மருத்துவ உதவி வாகனத்துக்கு நடந்துசெல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

Exit mobile version