Site icon Sangathy News

கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நேற்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வென்னப்புவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்டவர் 64 வயதுடைய மாரவில, மூதூகட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இத்தாலியில் வசித்து வருவதாகவும், கொல்லப்பட்டவர் அந்த வீட்டின் காவலாளியாக பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, காவலாளி கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் அறையொன்றில் மரணமடைந்திருப்பதைக் கண்டதாகவும், வீட்டின் கராஜில் நிறுத்தப்பட்டிருந்த வேன் வாகனமும் காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சந்தேகநபர்களை கைது செய்ய வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version