Site icon Sangathy News

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கைப் பெண்ணொருவர் காயம்…!

இஸ்ரேலின் – பேட் யாம் பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் குறித்த, இலங்கை பெண்ணைத் தொடர்புகொண்டு பேசிய போது, கண்ணாடி சிதறியதால் தமது கையில் கீறல் ஏற்பட்டதாகவும், வேறு பாதிப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டதாகவும், இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானிய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வையடுத்து, டெல் அவிவின் தெற்கே உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர், இன்று அதிகாலை தாம் பணியாற்றி வந்த வீட்டில் உள்ளவர்களுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

24 மணிநேரமும் நிலைமைகளைத் தூதரகம் கண்காணித்து வருவதாகவும், தாக்குதல்களால் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும், இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கோரியுள்ளார்.

இஸ்ரேலின், டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை வரை ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

 

Exit mobile version