Site icon Sangathy News

பள்ளிமுனை பகுதியில் கடற்படை வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

மன்னார் – பள்ளிமுனை பகுதியில், கடற்படையினரின் வசமுள்ள காணிகளை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர், குறித்த காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்த போதிலும், தற்போது காணி அளவீடு தொடர்பான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மக்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றைக் கடற்படையினர் அபகரிக்கும் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவது தொடர்பில் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதைக் கட்சியே தீர்மானிக்கும் எனவும், மூன்றாம் தரப்பின் கோரிக்கைக்கு ஏற்ப செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version