யாழ்ப்பாணம் மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக, பொதுமக்கள் நேற்றிரவு நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியதால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இந்தநிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என, இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் வட மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அங்கு போதுமான அளவு எரிபொருள் இருப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் வலியுறுத்தியுள்ளார்.

