Site icon Sangathy News

மிச்சிகனின் வெய்னில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வெய்னி பகுதியில் கிராஸ் பாயிண்ட் என்ற பெயரிலான கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. விடுமுறை நாளான நேற்று தேவாலயத்திற்கு சிறுவர்கள், பெரியவர்கள் என 150 பேர் வரை வருகை தந்திருந்தனர். அப்போது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதுபற்றி மூத்த பாதிரியார் பாபி கெல்லி ஜூனியர் கூறும்போது, கையில் ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில், பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, சர்ச்சுக்கு வந்திருந்த நபரில் ஒருவர் உஷாராகி, நிலைமையை புரிந்து லாரியை கொண்டு அந்த நபர் மீது மோதியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்த பாதுகாவலர் மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இதில், அந்த மர்ம நபர் பலியானார். இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், டெட்ராய்ட் நகரில் இருந்து மேற்கே 25 மைல்கள் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதமேந்திய மர்ம நபர் ஒருவர் திடீரென தேவாலயத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் என தெரிவிக்கின்றது.

சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸார் உடனடியாக சென்று மர்ம நபரின் உடலை கைப்பற்றினர். இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version