Site icon Sangathy News

துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க 750 மில்லியன் ரூபாய் நிதி

கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரத்துடன், 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் செயற்பாட்டிலுள்ள, 22 கடற்றொழில் துறைமுகங்களின் நிலைமைகள், சேவைகள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் துறைமுகப் பகுதிகளில் நிலவும் டெங்கு நோய் பரவல் பிரச்சினை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் அனைத்தையும், விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுக்களின் ஊடாக, கடற்றொழிலை மேம்படுத்துவதற்கும், கடற்றொழில் சமூகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் விரைவாக வழங்குவதற்கும் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.

2026ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடற்றொழிலை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version