அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது.
இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்பகுதியில் 25 செ.மீ. மழை பெய்தது.
சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் நதி நீர்மட்டம் 2 மணி நேரத்தில் பல அடி உயர்ந்தது.
இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் நடந்த கோடைக்கால முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருந்தனர்.
அவர்களில் 23 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 டிரோன்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எந்த வானிலை முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

