கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேசுவரத்தில் வசித்து வந்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி நேற்று காலமானார். அவரது மரணம் திரை உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு மல்லேசுவரம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு திரை உலக பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள். ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில் ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. சரோஜாதேவி தனது தாயார் ருத்ரம்மாவின் கல்லறை அருகே தனக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என கூறி இருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க தாயார் கல்லறை அருகில் அரசு மரியாதையுடன் சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகை சரோஜாதேவி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

