விழுப்புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எனக்கு தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் கல்லூரிக்கு ஃபீஸ் கட்டினேன்.
சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமலும், கிழிந்த உடையுடனும் கல்லூரிக்கு சென்றேன். கடினமாக உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். உழைப்பு மட்டுமே உங்களை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த என்னால் சாதிக்க முடியும் என்றால் எல்லோரும் சாதிக்க முடியும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எந்த உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் வேண்டும். கடந்து வந்த பாதையை மறக்க கூடாது.
சொந்த ஊரில் மைதானம் அமைத்து அதில் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறேன், சிறியதாக வழிகாட்டினால் எதுவும் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.

