Site icon Sangathy News

நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் வெளியானது

வடக்கு இலண்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தையான நபரின் பெயர் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, ஸ்டோக் நியூவிங்டனில் உள்ள டைனெவர் வீதிக்கு பெருநகர பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

அதன்பின்னர், 45 வயதான எர்டல் ஓஸ்மென் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். எனினும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

“ஓஸ்மென், ஒரு குழந்தையின் தந்தை. அவரது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டார்” என்று கொலை விசாரணையை வழிநடத்தும் துப்பறியும் தலைமை அதிகாரி டேவ் வீலம்ஸ் கூறினார்.

“திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை டைனெவர் வீதிப் பகுதியில் இருந்தீர்களா? யாராவது வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதை நீங்கள் பார்த்தீர்களா?

“அசாதாரணமாகத் தோன்றிய ஏதாவது ஒன்றை நீங்கள் கேட்டீர்களா – ஒருவேளை மக்கள் கூச்சலிடுவது, அல்லது சத்தமாக வாகனம் ஓட்டுவது? அவ்வாறான தகவல்கள் தெரிந்தால் எமக்கு அறிவியுங்கள்” என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலைக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டு விழித்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

டைனெவர் வீதிக்கு எதிரே வசிக்கும் ஒரு பெண் கூறுகையில், “என் கணவர் விழித்தெழுந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகச் சொன்னார். நாங்கள் இருவரும் எழுந்து பார்த்தோம். அந்த நபர் விழுந்த இடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி CPR செய்து கொண்டிருந்தார்” என்றார்.

“நான் சில துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டேன், முதலில் அது பட்டாசு என்று நினைத்தேன். ஏனென்றால், அது துப்பாக்கியாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்” என, மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்.

Exit mobile version