அமெரிக்க பாதுகாப்பு திணைக்களமான பென்டகனின் உளவுத்துறை அமைப்பின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் இந்த பதவி நீக்கத்தை அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் தாக்கம் தொடர்பான மதிப்பாய்வை வெள்ளை மாளிகை கண்டித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் (Jeffrey Kruse), இனி அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவராகப் பணியாற்ற மாட்டார் என பென்டகன் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 2 மூத்த இராணுவத் தளபதிகளும் பென்டகனால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இது குறித்த தகவல்களை, அமெரிக்க பாதுகாப்புத் துறை வழங்கவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களின் போது, ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன” என்று அறிவித்தார்
எனினும் இந்த தாக்குதல்கள், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைச் சில மாதங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளியதாக, அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தின் தகவல் வெளியில் கசிந்தது.
இந்தநிலையில், அந்த நிறுவனத்தின் மதிப்பீட்டை முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
அத்துடன், வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவு படுத்தும் முயற்சி என்றும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார்.

