பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகத்தில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அந்த விடயம், தற்போது அவருக்கு மீண்டும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறிய பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்றொரு கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும்.
ஹரி தனது சுயசரிதைப் புத்தகமான ஸ்பேர் என்னும் புத்தகத்தில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அப்படியானால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா பெற்ற அவர், விசா விண்ணப்பத்தில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது.
ஹரி பொய் சொல்லியதாக தெரியவந்தால், அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என்னும் நிலையும் உருவானது.
அது தொடர்பான வழக்கில், ஹரிக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்த விடயமும் வெளியாகவில்லை.
ஆனால், தற்போது ஹரி விசா பெற்றது தொடர்பான 1,000க்கும் அதிகமாக ஆவணங்களை ட்ரம்ப் நிர்வாகம் வெளிக்கொணர்ந்துள்ளதாம்.
விடயம் என்னவென்றால், அவற்றில் சில ஊடகங்களில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் நீதிபதி ஒருவர், அந்த 1007 ஆவணங்களையும் ஆய்வு செய்து, அவற்றில் எந்தெந்த ஆவணங்களை வெளியிடலாம் என முடிவு செய்ய இருக்கிறார்.
ஆக, விசா விண்ணப்பத்தில் ஹரி பொய் சொன்னதற்கு ஆதாரமாக ஆவணங்கள் ஏதாகிலும் வெளியிடப்படுமானால், ஹரிக்கு சிக்கல்தான் என கருதப்படுகிறது.

