கட்டாரின் தலைநகரின் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் உறுப்பினர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், தமது பேச்சுவார்த்தையாளர்கள் குழுவைக் கொல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் அண்மைய முன்மொழிவு குறித்து விவாதிக்க ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தோஹாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இஸ்ரேலிய விமானங்கள் அந்த வளாகத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளன.
இதனைக் கட்டார் அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது கோழைத்தனமான, சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்றும் அது கூறியுள்ளது.
அத்துடன், தாக்குதலில் ஹமாஸின் உயிரிழப்பு விபரங்களை அறிவிக்காமல், தமது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
எனினும் 2023 ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலை ஏற்பாடு செய்த மூத்த ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், இந்த தாக்குதல் முழுமையாக நியாயமானது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் துரதிஸ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எனினும் ஹமாஸை ஒழிப்பது ஒரு தகுதியான இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான கட்டார், அமெரிக்காவின் விமானத் தளத்தையும் கொண்டுள்ளது.
இந்தநிலையில் 2012 முதல் ஹமாஸின் அரசியல் பணியகத்துக்கும் இடமளித்துள்ளது
அத்துடன், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஷுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகவும் செயல்பட்டு வருகிறது.
இதேவேளை, குறித்த தாக்குதல் நடவடிக்கையில் 15 இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமது தாக்குதலில் ஹமாஸ் உறுப்பினர்களில் தலைமை பேச்சுவார்த்தையாளரும் நாடு கடத்தப்பட்ட காசா தலைவருமான கலீல் அல்-ஹய்யா மற்றும் நாடு கடத்தப்பட்ட மேற்குக் கரைத் தலைவர் ஜாஹர் ஜபரின் ஆகியோர் அடங்குவர் என்று இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனினும், தமது தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல் ஹய்யா இந்த தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

