கடந்த செவ்வாயன்று டோஹாவில் சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போன இருவரைத் தொடர்ந்தும் தேடி வருவதாக கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில், மிகவும் சர்ச்சைக்குரிய தாக்குதல் வெற்றி பெறவில்லை என்று இஸ்ரேலிய இராணுவத் தரப்புக்களில் கவலை ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலின்போது பலியான, ஹமாஸ் கீழ் மட்ட உறுப்பினர்களில் மூன்று பேரின் உடல்களைக் கட்டார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
சம்பவத்தில் கட்டாரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
எனினும், தமது சிரேஷ்ட பேச்சுவார்த்தையாளர் கலீல் அல் ஹய்யாவை படுகொலை செய்யும் இஸ்ரேலின் முயற்சி இந்தத் தாக்குதலின்போது தோல்வியடைந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

