Site icon Sangathy News

வரவு செலவுத் திட்டம் – வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரை

ஒட்டோமொபைல் மற்றும் இலத்திரனியல் உபகரணக் கைத்தொழில்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு ஒட்டோ மொபைல் மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் தங்கள் முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

தற்போதைய அரசாங்கம் வாகன இறக்குமதி தொடர்பாக எடுத்த முடிவின் காரணமாக வாகன இறக்குமதித் துறை விரிவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்காக பயனுள்ள பல பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

இலத்திரனியல் உபகரணத் தொடர்பான உற்பத்திகளை இறக்குமதி செய்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் வரி செலுத்தாமல் இலத்திரனியல் உபகரணங்கள் திருட்டுத்தனமாக நாட்டிற்குள் எடுத்துவரப்படுவதால் சந்தை ஏற்றத்தாழ்வு மற்றும் பொருட்களின் தரம் தொடர்பான குறைபாடு ஏற்பட்டிருப்பதாக இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் அரசுக்கு அதிக வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், நுகர்வோர் பொருட்களின் தரம் குறித்து பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தத் துறையிலுள்ள நிபுணர்கள் வழங்கிய அனைத்து பயனுள்ள பரிந்துரைகளும் அடுத்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும், தரமான பொருட்களை இறக்குமதி செய்வதற்காக தேவைப்பட்டால் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

வரி செலுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version