Site icon Sangathy News

காசாவில் இஸ்ரேல் வெறியாட்டம் – 65 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ள கூடார முகாம்களுக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.

இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தாக்குதல்களால், பல மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன.

காசா நகரில் இருந்து தென் பகுதிக்கு மக்கள் வெளியேறுவதற்காக இரண்டு நாட்களுக்கு புதிய வழித்தடம் ஒன்றை இஸ்ரேல் திறந்துள்ளது. வாகனங்களிலும், கால்நடையாகவும் பாலஸ்தீன மக்கள் காசா நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வான், கடல் மற்றும் நிலத்திலிருந்து நகரம் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும், மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தப்பிச் செல்லும் மக்கள் தெரிவித்தனர்.

உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவை என்று மக்கள் விவரிக்கின்றனர்.

இதற்கிடையே காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, இஸ்ரேல் இனப்படுகொலையை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

 

Exit mobile version