Site icon Sangathy News

‘டியூட்’ பட நடிகைக்கு பாலியல் தொல்லை- கால் டாக்சி ஓட்டுனருக்கு வலை வீச்சு

நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்த படத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்து உள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர் மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்தார்.

ரெயில் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய துணை நடிகை அங்கிருந்து விழா நடைபெற்ற கல்லூரிக்கு கால் டாக்சி மூலமாக சென்றுள்ளார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபற்றி துணை நடிகை விழா முடிவடைந்ததும், பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று பரபரப்பு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில் கார் டிரைவர் பெயர் கணேச பாண்டியன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் கால் டாக்சிகளில் பயணம் செய்பவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை பயணிகள் எழுப்பி உள்ளனர்.

 

Exit mobile version