Site icon Sangathy News

‘டியூட்’ படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி – சரத்குமார்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியானது முதல் வசூல் குவித்து வரும் நிலையில் 5 நாட்களில் ரூ.95 கோடி வசூலித்தது. விரைவில் ரூ.100 கோடியை எட்டுகிறது.

இதனை தொடர்ந்து, ‘டியூட்’ படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில்,

“படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் ‘காஞ்சனா’, ‘போர் தொழில்’ போன்ற படங்களில் நடித்தேன்.

‘டியூட்’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக ‘டியூட்’ படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.

 

Exit mobile version