Site icon Sangathy News

அச்சுறுத்தல் – SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு காவல்துறை பாதுகாப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக 2 காவல்துறை அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளனர்.

ஜகத் விதான இன்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய ஜகத் விதான, இந்த விவகாரத்தை விசாரிக்க காவல்துறை மா அதிபர்(IGP) எழுத்துப்பூர்வமாக களுத்துறை பிரதி காவல்துறை மா அதிபருக்கு (DIG) அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

“காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதத்தில், வாகனத்திலிருந்து இறங்கும் தருணத்தில் என்னை கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் சந்தேக நபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உள்ளது. அதில் ‘நான் சுட்டுக் கொல்லப்படுவேன்’ என எழுதப்பட்டுள்ளது,” என அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் ஜகத் விதான இதன்போது வலியுறுத்தினார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கவலை தெரிவித்ததோடு, வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர அண்மையில் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்டு, இவ்வாறான அச்சுறுத்தல்களை இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது என எச்சரித்தார்.

“வெலிகம பிரதேச சபை தலைவர் காவல்துறைப் பாதுகாப்பைக் கோரியிருந்தும் சுட்டுக் கொல்லப்பட்டார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் இவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். இது ஒரு வேடிக்கையல்ல. மற்றுமொரு துயரம் நிகழ்வதற்கு முன் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சஜித் பிரேமதாச கூறினார்.

 

Exit mobile version