Site icon Sangathy News

ஹமாஸ் படைகள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும், இல்லையெனில்! கடும் மிரட்டல்

ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது அணு ஆயுதத் திட்டங்களை மீண்டும் தொடங்கினால், அமெரிக்கா அந்த நாட்டின் மீது மற்றொரு பெரிய தாக்குதலை நடத்த ஆதரவளிக்கக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அத்துடன், எஞ்சியுள்ள ஹமாஸ் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும், மறுத்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப்,

ஜூன் மாதம் அமெரிக்கா நடத்திய பெரும் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது ஆயுதத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது என்றார்.

இன்னொரு முறை அமெரிக்காவை தாக்குதலுக்கு தூண்ட வேண்டாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், நெதன்யாகுவுடனான பேச்சுவார்த்தைகள், காஸா அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பதிலும், ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீதான இஸ்ரேலின் அச்சத்தை நிவர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நெதன்யாகு கூறுகையில், இஸ்ரேல் ஈரானுடன் ஒரு மோதலை நாடவில்லை என்றும், ஆனால் ஈரான் தொடர்பில் வெளிவரும் தகவல்களை ட்ரம்பிடம் தெரிவிக்க வேண்டும் என விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல விரும்புவதாக ட்ரம்ப் கூறினார். ஆனால், இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன,

மேலும் அடுத்த கட்டத்திற்காக எதிர்பார்க்கப்படும் மிகவும் கடினமான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு அவை இன்னும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

ஆயுதங்களைக் கைவிட மறுத்துவிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலியப் படைகள் காஸா பிரதேசத்தின் பாதிப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டி வருகிறது.

ஹமாஸ் அமைப்பு அமைதியான முறையில் ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவிக்காவிட்டால், அதைச் செய்விப்பதற்காக இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் நெதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.

மட்டுமின்றி, இஸ்ரேல் ஒப்பந்தத்தின்படி தனது கடமையை நிறைவேற்றியுள்ளது என்று வாதிட்ட ட்ரம்ப், ஹமாஸ் படைகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

மொத்தத்தில், ட்ரம்பின் கருத்துக்கள் அவர் நெதன்யாகுவின் அணியில் உறுதியாகவே இருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. அதேவேளையில், ட்ரம்பின் சில உயர்மட்ட அதிகாரிகள் காஸா போர்நிறுத்தத்திற்கான நெதன்யாகுவின் ஈடுபாடு, மற்றும் போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து தனிப்பட்ட முறையில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

 

 #DonaldTrump #Netanyahu #Israel #Iran #Hamas #USA #MiddleEastUpdate #WarWarning #GazaPeace #GlobalPolitics #MarALago

 

Exit mobile version