சனிக்கிழமை இரவு மின்னல் வேகப் படை நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ கண்கள் மறைக்கப்பட்டு கைவிலங்குடன் தோன்றும் படம் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது “ருத் சோஷல்” சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் படத்தையே இங்கே காண்கிறீர்கள். அது ‘ஈவோ ஜீமா’ என்ற அமெரிக்கத் தாக்குதல் கப்பலில் எடுக்கப்பட்ட படம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறுகிய நேரம் நீடித்த பரந்துபட்ட ஒர் ஒப்பரேஷனில் ஜனாதிபதியும் அவரது துணைவியாரும் அமெரிக்கப் படைகளால் எவ்வாறு கைப்பற்றப்பட்டனர்
என்ற விவரங்களையும் ட்ரம்ப் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
மடூரோவை அமெரிக்க இராணுவத்தின் – உயர் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவாகிய டெல்ரா படையே (Delta force) கைப்பற்றியது.
ஒரு கோட்டை போன்ற பெரிய வீடு ஒன்றில் இருந்த சமயமே இருவரையும் படையினர் கைதுசெய்துள்ளனர். அங்கு ஒரு பலத்த பாதுகாப்புக் கவச அறை இருந்துள்ளது. அதற்குள் சென்று ஒளிந்துகொள்ள முயன்ற போதும் அது முடியாமற் போனது. அந்த அறையின் இரும்புக் கதவை உடைத்துத் திறப்பதற்கு அமெரிக்கப் படைகள் தயாராக இருந்தன. ஒரு வேளை அவர் தப்பிச் செல்ல முயன்றிருந்தால் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார்.
இந்த நடவடிக்கையில் அமெரிக்க வீரர்கள் எவரும் கொல்லப்படவில்லை. சிலருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. படை நடவடிக்கையை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதுபோன்ற காட்சி எதையும் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அதை நேரலையில் பார்த்து தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்தையும் அவதானிக்க முடிந்தது, அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போலவே பார்த்தேன்.
-இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதேசமயம், வெனிசுலாவில் முறையான ஆட்சி மாற்றம் ஒன்று முழுமையாக நிறைவுறும் வரை அந்த நாட்டுக்கு அமெரிக்காவே தலைமை வகிக்கும் என்று அவர் செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
அமெரிக்க வீரர்கள் மடூரோவின் வதிவிடத்துக்குள் உள்ளூர் நேரப்படி அதிகாலை இரண்டு மணியளவில் நுழைந்தனர் எனக் கூறப்படுகிறது. அந்த வேளை வானில் பறந்துகொண்டிருந்தஅமெரிக்கப் போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரெல்த் ஹெலிக்கொப்ரர்கள் மூலம் (stealth helicopters) அங்கு குதித்த கொமாண்டோக்கள் வீட்டைச் சுற்றிவளைத்துக் கொண்டனர். மடூரோவும் மனைவியும் சம்பவ இடத்திலேயே படையினரிடம் சரணடைந்தனர் என்று கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஹெலிக்கொப்ரர் மூலம் ஈவோ ஜீமா(Iwo Jima) என்ற அமெரிக்கப் போர்க் கப்பலுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தக் கப்பல் நியூயோர்க் நோக்கிப் பயணிக்கிறது என்று செய்தி நிறுவனங்கள்
தகவல் வெளியிட்டுள்ளன.
இன்றைய படை நடவடிக்கை கடந்த பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு வந்தது.
வெனிசுலா அரசாங்கத்தினுள் ஊடுருவியிருந்த சிஐஏ உளவாளிகளே ஜனாதிபதி மடூரோவின் இருப்பிடத்தைக்
கண்காணிப்பதற்கு உதவினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசூலா மீதான படை நடவடிக்கையில் 150 க்கு மேற்பட்ட அமெரிக்கப் போர் விமானங்கள் பங்குவகித்துள்ளன.

